நடிகை ஊர்வசி இயக்குநர் பாக்யராஜ் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இயக்குநர் பாக்யராஜின் மறைவு திரைத்துறையினரிடம் பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்பு மகள் திருமணத்திற்கு கோவா சென்றுவிட்டு சென்னை திரும்பியவர் திடீரென உயிரிழந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.பாக்யராஜால் அறிமுகப்படுத்தப்பட்ட பல நடிகர்கள் சினிமாவில் புகழ் பெற்றாலும் அதில் மிகச்சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர் ஊர்வசி. பாக்யராஜின் மறைவு அவருக்கும் வேதனையை அளித்துள்ளது. கடந்தாண்டு ஒரு நேர்காணலில் தேசிய விருதுக்குழு குறித்து காட்டமாக பேசிய ஊர்வசி பாக்யராஜ் குறித்தும் பேசினார்.குறிப்பாக, “முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நான் மிக மெலிதாக இருப்பேன். அப்படத்தில் விருப்பமே இல்லாமல்தான் நடித்தேன். பாக்கியராஜ் அவரே சேலை கட்டி எப்படி நடக்க வேண்டுமென நடந்து காட்டுவார். ஒவ்வொரு காட்சிகளிலும் எப்படியெல்லாம் சிரிக்க, அழுக வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்தது அவர்தான். எனக்காக நிறைய முயற்சிகளை எடுத்தார். முக்கியமாக, என் பெயரைத் திரையில் போடும்போது, “என்றும் உங்கள் ஆதரவை நாடும் ஊர்வசி” என்றுதான் போட்டார்.முந்தானை முடிச்சு திரைப்படத்தில்...யார் இதையெல்லாம் செய்வார்கள்? வேறு யாராவதாக இருந்தால் நான் செய்த சேட்டைகளுக்கும் உதாசீனங்களுக்கும் 4 நாள்களில் என்னை விரட்டியடித்திருப்பார்கள். ஆனால், பாக்கியராஜ்தான் எனக்கான இடத்தைக் கொடுத்தார். அதனால், இன்றும் நான் மேக்கப் போடுவதற்கு முன் அவரை நினைத்துக் கொள்வேன்” எனக் கூறியிருந்தார். இன்று பாக்யராஜின் மறைவை அறிந்ததும், “எதையும் பகிரும் நிலையில் நான் இல்லை” என அவர் வருத்தமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜிடமிருந்து இளையராஜா கற்றுக்கொண்ட பாடம்! Actress Urvashi spoke movingly about director Bhagyaraj.