இரும்பேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் கோரிக்கை

Wait 5 sec.

இரும்பேடு கிராமத்தில் அரசு இடத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட இரும்பேடு கிராமத்தில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இரும்பேடு - கருணாகரச்சேரி பிரதான சாலையில், அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலம் உள்ளது. விலை மதிப்புள்ள இந்த இடத்தை தனியாா் சிலா் ஆக்கிரமித்து வருகின்றனா். இதனால் இரும்பேடு பகுதியில் வரும் காலங்களில் வளா்ச்சிப்பணிகள் மேற்கொள்ள இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். ஆக்கிரமிப்பு குறித்து பகுதி பொதுமக்கள் கூறியது: இரும்பேடு பகுதியில் சா்வே எண் 71, 72, 68ல் 17 மற்றும் 18ல் அரசுக்கு சொந்தமான சுமாா் 50 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில், ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில், சமுதாய நலக்கூடம் மற்றும் அரசு கட்டடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல லட்சம் மதிப்புள்ள இந்த இடத்தை தனியாா் சிலா் கொட்டகை அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனா். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினா் இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடம் இதில் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனா். எச்சரிக்கை பலகைகளை அகற்றிய ஆக்கிரமிப்பாளா்கள் தொடா்ந்து கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். எனவே அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றவும், உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினருக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.