ஹெட்போன் இல்லாமல் இசை கேட்பவர்களுக்கான மெட்ரோ ரயில் விதிகள் பேருந்திலும் கடைப்பிடிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே அதிகரித்திருக்கிறது.பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில் எனப் பயணம் மேற்கொள்ளும் போது அருகில் இருப்பவரோ, உடன் பயணிப்பவரோ சில நேரங்களில் ஹெட்போன்களின்றி மொபைல் போனை சப்தமாக பார்த்து வருவது பலருக்கும் எரிச்சலுட்டும். இதனைத் தடுக்க மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, மெட்ரோ ரயிலில் விதிகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது செல்போனைப் பயன்படுத்தும் விதிமுறைகளை மீறினால் இனி அதிகபட்சமாக ரூ. 2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரா நிர்வாகம் கறாராக உத்தரவிட்டிருக்கிறது. மெட்ரோ ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரத்த குரலில் பேசுவது, செல்போனின் ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது, ஹெட்போன் இல்லாமல் இசை அல்லது காணொளிகளை இயக்குவது, உண்பது போன்ற செயல்கள் தண்டனைக்குரியவை என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.பல்வேறு நிகழ்வுகளுக்காக செல்லும் பயணிகளின் அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணச் சூழலை உறுதி செய்யும் நோக்கில், இதுபோன்று சப்தமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து எரிச்சலூட்டினால் கடுமையான தண்டனையுடன் அபராதமும், அனைவரும் பயண ஒழுங்குமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அனைவரும் சக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, செல்போனை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், உரத்த குரலில் பேசுவதையும் ஒலிப்பெருக்கி வசதியை பயன்படுத்துவதையும் தவிர்த்து, கட்டாயம் ஹெட்போன் பயன்படுத்துமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறான சூழலில், மெட்ரோவைத் தவிர்த்துவிட்டு மக்கள் அதிகளவில் பயணிக்கும் பேருந்து மற்றும் ரயில்களிலும் இதுபோன்ற நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மாநகர்ப் பேருந்துகளில் பயணிக்கும் கல்லூரி மாணவ - மாணவிகள், இளைஞர்கள், ஏன்... வடமாநிலத்தவர்கள் எனப் பலரும் தங்கள் மொபைல் போனில் பாடல்களை இசைக்க விடுவது, சப்தமாக இன்ஸ்டா ரீல்ஸ்களையும், விடியோக்களையும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துக்கின்றன.பணி நேரம் முடிந்து களைப்புடன் வீட்டுக்குச் செல்லும்போது இதுபோன்ற நச்சரிப்புகள் கூடுதல் கோவத்தை ஏற்படுத்துவதாகவும் பலர் கொந்தளிக்கின்றனர். வயர் ஹெட்போன்கள், வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன்கள் என அதிநவீன எலெக்ட்ரானிஸ் கருவிகள் வந்தபோதிலும், இது மாதிரியான அசௌகரியங்களைத் தவிர்க்கவும் போன் பயன்படுத்துவோர் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க முன்வர வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நடத்துநரே அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்கள் போன்று பேருந்துகளில் ஒலிக்கப்பட்ட வின்டேஜ் பாடல்களே மாநகர்ப் பேருந்துகளில் தற்போது ஒலிக்கப்படுவதில்லை. மெட்ரோ ரயில்கள் போன்றே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே, அசௌகரியத்தைக் குறைக்க முடியும் கூறுகிறார்கள் பாதிக்கப்பட்ட சகப் பயணிகள்.Chennai Metro new rule: Playing music without earphones as well Will be rules implemented on chennai mtc buses?