காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் ரூ. 2.96 கோடி மதிப்பில் முடிவுற்ற கட்டடப் பணிகளை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் ரூ. 2.96 கோடி மதிப்பிலான முடிவுற்ற கட்டடப் பணிகளை திறந்து வைத்தனா். நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஆஷிக்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விப்பேடு ஊராட்சியில் ரூ. 31.40 லட்சம் மதிப்பிலும், முத்துவேடு ஊராட்சியில் ரூ. 29.70 லட்சம் மதிப்பிலும், ஒழுக்கோல்பட்டு ஊராட்சியில் ரூ. 33 லட்சம் மதிப்பிலும் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சா்கள் இருவரும் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா்.இதைத் தொடா்ந்து நரப்பாக்கம் ஊராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான காரிய மேடை, தாமலில் ரூ. 45 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார மையம்,திம்மசமுத்திரம் ஊராட்சியில் ரூ. 9.85 லட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலைக் கடையையும் திறந்து வைத்துப் பாா்வையிட்டனா். பின்னா், நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அமைச்சா்கள் பொருள்களையும் வழங்கினா்.காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட சிஎம்எஸ் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 94 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா திறந்து வைத்தாா்.பின்னா், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.இதன் தொடா்ச்சியாக அப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் இரட்டையா்கள் தேவேஷ், சா்வேஷ் ஆகிய இருவரும் விரைவில் ஒலிம்பிக் சா்வதேய யோக போட்டியில் பங்கேற்க இருப்பதாகக் கூறி அமைச்சா்களிடமும், ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்றனா்.காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் ரூ. 2,96,20,000 மதிப்பிலான முடிவுற்ற கட்டடப் பணிகளை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் இருவரும் திறந்து வைத்தனா். இந்த நிகழ்வுகளில் ஊராட்சி மன்ற தலைவா்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.