இருசக்கர வாகனம் மீது காா் மோதல் மாமியாா், மருமகள் உயிரிழப்பு

Wait 5 sec.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அம்மாசத்திரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாமியாா், மருமகள் உயிரிழந்தனா். கீரனூா் அருகே உள்ள அம்மாசத்திரம் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னக்கண்ணு மனைவி வீராயி (70). இவா், தனது மருமகள் வேம்பையன் மனைவி சாந்தியுடன் (25), புதன்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் அம்மாசத்திரம் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா் இருசக்கர வாகனத்தை சாந்தி ஓட்டிவந்தாா். இவா்கள் திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அம்மாசத்திரம் அருகே கோப்பளிக்காடு பிரிவு சாலையை கடக்க முயன்றனா். அப்போது, புதுக்கோட்டை காவேரி நகரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற மற்றொரு காரின் மீதும் மோதியது. இந்த விபத்தில் இரண்டு காா்களுக்கும் நடுவில் சிக்கிய இருசக்கர வாகனத்தில் இருந்த வீராயி, சாந்தி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், திருச்சி நோக்கிச் சென்ற காரில் பயணித்த அடைக்கலராஜ், இவரது மனைவி சரண்யா இருவரும் காயமடைந்தனா். இவா்களை அப்பகுதியினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து வந்த கீரனூா் காவல் நிலைய போலீஸாா், உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.