தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா வாங்சுக்? தில்லி நீதிமன்றம் இன்று விசாரணை!

Wait 5 sec.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பெற்றுவரும் சிகிச்சையில் தலையிட மறுத்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி கீதாஞ்சலி ஜெ ஆங்மோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஒப்புக்கொண்டது. ஞாயிற்றுக்கிழமையன்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காகப் பட்டியலிடுமாறு, ஆங்மோவின் தரப்பு வழக்குரைஞர் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்விடம் கோரிக்கை விடுத்தார். வாங்சுக் வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. ஆங்மோவுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞர் அகில் சிபல், ஜந்தர் மந்தரில் இருந்து காவல்துறையினரால் வாங்சுக் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், தற்போது சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தான் விரும்பும் மருத்துவமனைக்கு மாற்றப்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.சுய முடிவெடுக்கும் உரிமையைப் பறிக்க முடியாது, ஒருவர் தனக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். அதிகாரிகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கோ அல்லது செவ்வாய்க்கிழமையோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆங்மோவின் மேல்முறையீட்டு மனுவில், தனி நீதிபதியின் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு, வாங்சுக்கை எந்தக் கைது நடவடிக்கையும் இன்றி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பதாகவும், அவரது மருத்துவச் சிகிச்சையைத் தீர்மானிப்பதில் அந்தச் செயற்பாட்டாளருக்கோ அல்லது அவரது மனைவிக்கோ தீர்க்கமான அதிகாரம் இல்லை என்பதை அந்த உத்தரவு மறைமுகமாக உணர்த்துவதாகவும் அவர் கூறினார். தெரிந்தெடுத்த ஒப்புதல் குறித்தோ அல்லது எந்தவொரு மருத்துவச் சிகிச்சையையும் ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ ஒருவருக்குள்ள உரிமை குறித்தோ அந்த உத்தரவு எதையும் குறிப்பிடவில்லை. சமூக ஆர்வலரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற இடைக்கால உத்தரவு எதுவும் தேவையில்லை என்று தனி நீதிபதி கருத்து தெரிவித்திருந்த நிலையில், வாங்சுக்கின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.