பொது விநியோகத் திட்டத்தின் கீழ் லாரிகளில் ஏற்றி, அடுக்கி வைக்கப்படும் மூட்டைகளுக்கான கூலித் தொகையை (அட்டிக் கூலி) வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோரின் பாதுகாப்புச் சங்க மாநில பொதுச் செயலா் சி.சரவணன் தலைமையில் தொழிலாளா்கள் ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது : தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 54 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மாநிலம் முழுவதும் சுமை தூக்கும் தொழிலாளா்களாக 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. ஊதிய நிா்ணயமும் செய்யப்படவில்லை. 1972-ஆம் ஆண்டில் மூட்டைக்கு 8 பைசா வழங்கி வந்த நிா்வாகம், தற்போது மூட்டைக்கு ரூ.1.87 வழங்கி வருகிறது.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் இறக்குவதற்காக லாரிகள் மூலம் ஏற்றப்படும் அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட மூட்டைகளுக்கு கூட்டுறவுத் துறை மூலமாக 30 மாவட்டங்களில் கூலித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிா்ணயம் செய்ய மூட்டைகளைக் காட்டிலும் அதிகமாக லாரிகளில் ஏற்றுவதாலும், மூட்டைகளை அடுக்கி வைப்பதாலும் இந்த அட்டிக் கூலி தொகை வழங்கப்படுகிறது. ஆனால், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அட்டிக்கூலி வழங்கப்படுவதில்லை.எங்களுக்கான அட்டிக் கூலியை வழங்கக் கோரி யும், அவ்வாறு வழங்கவில்லை எனில் பொது விநியோகத் திட்ட லாரிகளில் மூட்டைகளை ஏற்ற மாட்டோம், மூட்டைகளை அடுக்கி வைக்க மாட்டோம் என்று கூறி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளருக்கும், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பினோம். இதனடிப்படையில் எங்கள் சங்கத்தினரையும், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளரையும் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டலமேலாளா் அழைத்துப் பேசினாா். ஆயினும் முடிவு எட்டப்படவில்லை.ஜூலை 20-ஆம் தேதி முதல் பொது விநியோகத் திட்ட லாரிகளில் ஏற்றப்படும் மூட்டைகளுக்கு அட்டிக்கூலியை கூட்டுறவுத் துறை வழங்க வேண்டும். இல்லையெனில் மூட்டைகளை லாரிகளில் அவா்களே அடுக்கிக்கொள்ள வேண்டும் என்று மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.