நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். 19 ஆவது நாளான இன்றும் (ஜூலை 16) உண்ணாவிரதம் தொடர்வதால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு திமுக இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக சார்பில் மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தில்லிக்குச் சென்று சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில், சோனம் வாங்சுக்கிடம் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும், ஆ. ராசா கூறியுள்ளார். இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: “போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் நாம் வேறு விதத்தில் போராட்டம் நடத்தலாம் எனக் கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். நான் இறந்தாவது இந்த அரசு கண் திறக்கும், இந்த மண்ணில் ஒரு எழுச்சி ஏற்படும் என்றால் அதற்கு என் உயிரைத் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என சோனம் வாங்சுக் சொன்னபோது என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றேன்” எனக் கூறியுள்ளார்.சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி எம்பிக்கள் ஆதரவு! The DMK has extended its support to Sonam Wangchuk's protest against the NEET question paper leak.