இயக்குநர் ஜேசன் சஞ்சய் தன் திரைப்படமான சிக்மா குறித்து பேசியுள்ளார். முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சிக்மா என்கிற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். நடிகர்களின் வாரிசுகள் பெரும்பாலும் நடிப்பில்தான் திரையில் அறிமுகமாவார்கள். ஆனால், ஜேசன் இயக்குநர் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சிக்மா விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய், “சினிமாவை தேர்வுசெய்தபோது பெற்றோர், சகோதரி, நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் நேர்மறையான கருத்துகளைச் சொன்னதுடன் என்னை ஊக்கப்படுத்தினார்கள். மேலும், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வாழ்த்தினர். இளம் வயதிலேயே இயக்குநரானதால் நான் காதல் கதைகளைத்தான் இயக்குவேன் என நினைத்தனர். ஆனால், இருவரைக் காதலிக்க வைப்பதைவிட, ஒரு கேங்ஸ்டர் குழு அட்வெஞ்சராக கொள்ளையடிப்பதில்தான் ஆர்வம் இருந்தது. சிக்மாவில் அதைத்தான் எடுத்திருக்கிறேன். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் எனக்கு கதை சொன்ன போது வேண்டாமென மறுத்தேன். காரணம், என்னால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் அது தவறாகிவிடும் என்கிற பயம் இருந்தது. ஆனால், அவர் என்னை அணுகியது பெருமையைக் கொடுத்தது. இயக்குநர்களுக்குள் எப்போதும் ஒரு நடிகன் இருந்துகொண்டே இருப்பான். நான் நடிகனாவேனா என்பது சிக்மாவுக்குப் பின் தெரியவரும்.” எனத் தெரிவித்துள்ளார். Director Jason Sanjay has spoken about his film Sigma.