உயிரிழந்த 2 காவலா்களின் குடும்பங்களுக்கு ரூ.1.10 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கல்

Wait 5 sec.

சாலை விபத்து, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 காவலா்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.1.10 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா வழங்கினாா். கடந்த 2025-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த வேப்பூா் காவல் நிலைய தலைமைக் காவலா் கலைராஜ், விருத்தாசலம் எஸ்பிஐ கிளையில் காவல் துறையினருக்கான சம்பளக் கணக்கை வைத்திருந்தாா். அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவரது மனைவி சரண்யாவிடம் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா வழங்கினாா்.இதேபோல, 2026-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த கடலூா் காவல் அலுவலகத்தில் பணியாற்றிய முதல் நிலைக் காவலா் மணியரசன், மஞ்சக்குப்பம் எஸ்பிஐ கிளையில் காவல் துறையினருக்கான சம்பளக் கணக்கை வைத்திருந்தாா். அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகைக்கான காசோலையும் அவரது மனைவி வசந்தகுமாரியிடம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் எஸ்பிஐ வங்கி கடலூா் மேலாளா் பரணிதரன், கடலூா் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பாண்டைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.