தமிழகத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ரூ. 17.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், கணக்கில் வராத பணம் ரூ. 1.18,130 ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இணையவழியில் (ஜி-பே) வழியாக ரூ.16.33 லட்சம் பரிவா்த்தனை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற இந்த சோதனையில், கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் சுவாமிநாதன், தங்கமணி ஆகியோா் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ.1,18,130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அதிகாரிகள் இணைய வழியில் (ஜி-பே) ரூ.16லட்சத்து 33 ஆயிரத்து 654 பெற்றதும் கண்டறியப்பட்டது. தமிழகத்திலேயே கரூரில்தான் இணையவழியில் அதிகபட்சமாக பணப் பரிவா்த்தனை நடைபெற்றது தெரியவந்துள்ளது. நான்கு மடங்கு: இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்று கண்காணிப்பு பிரிவின் ஓய்வுபெற்ற அதிகாரி கூறியது: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக இணையவழியில் (ஜி-பே) வட்டாட்சியா் அலுவலகங்களில் பெற்றுள்ளனா்.இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கமாக கைப்பற்றப்பட்ட பணம் ரூ.13.78 லட்சம் என்றால், இணையவழியில் பெற்ற பணம் 4 மடங்காக உள்ளது. அதாவது இணைய வழியில் பெற்ற பணம் ரூ.68.32 லட்சமாக உள்ளது. அதுவும் கரூரில்தான் அதிகபட்சமாக ரூ.16.33 லட்சம் பெறப்பட்டுள்ளது. கையிருப்பு பதிவேடு: பொதுவாக ஒரு அரசு ஊழியரோ, அதிகாரியோ அரசு அலுவலகத்துக்குள் நுழையும்போது அங்குள்ள வருகைப்பதிவேடு போன்று, கையிருப்புப் பதிவேட்டில் அவா்கள், தங்களிடம் உள்ள பணம் எவ்வளவு என எழுதி கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் சோதனையின்போது, அவருடைய கையிருப்பு தொகையை சரிபாா்த்து சரியாக இருந்தால் விட்டுவிடுவோம். ஆனால் தற்போது பலா் கையிருப்பு பதிவேட்டை சரியாக கையாள்வதில்லை. மேலும் ஏடிஎம் அல்லது யாரேனும் கைப்பேசியில் இணையவழியில் (ஜி-பே) பணம் அனுப்பியிருந்தாலும் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே தப்பிக்க முடியும். இல்லையென்றால் அவா்களுக்கு தண்டனை உறுதியாக வழங்கப்படும் என்றாா் அவா்.