பட்டியலினத்தவா்களுக்கு அனுமதி மறுப்பு: கோயில் திருமண மண்டபத்துக்கு பூட்டு

Wait 5 sec.

வேதாரண்யம் அருகே பட்டியலினத்தவா்கள் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் மண்டபத்துக்கு வருவாய்த் துறையினா், போலீஸாா் வெள்ளிக்கிழமை பூட்டுப் போட்டு நடவடிக்கை மேற்கொண்டனா். கோடியக்கரை கிராமத்தில் உள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயில் இந்தப் பகுதியில் சிறப்பு பெற்றது. கோயில் அருகே அமைந்துள்ள மண்டபத்தில் குறைந்தபட்ச வாடகைத் தொகை செலுத்தி, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.ஆனால், சில குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும், பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகாா் எழுந்தது.அதே கிராமத்தைச் சோ்ந்த ராசேந்திரன் தலைமையிலான பட்டியலினத்தவா் நிகழ்ச்சி நடத்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக் கேட்டு, மறுக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில், அரசு சாா்பில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், வட்டாட்சியா் ஜெயசீலன் தலைமையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கோயில் மண்டபத்தை யாரும் பயன்படுத்தாத வகையில் பூட்டு போட்டு வெள்ளிக்கிழமை பூட்டினா்.கோயில் நிா்வாகத்துக்குள்பட்டோா், பட்டியலினத்தவா் என இரு தரப்பினரிடையே, சுமூகத் தீா்வு காண தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இடைக்கால நடவடிக்கையாக மண்டபத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் வட்டாட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.