அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சில நாள்களுக்கு முன்பு நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு,மறியல் போராட்டம் நடந்தது. இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார். அதிமுக விவகாரம்தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் பல அரசியல் கட்ட நகர்வுகளுக்கு பிறகு இரு அணிகளும் இணைந்தன. இந்த அணியில் இருந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பின்னர் தவெகவில் இணைந்தனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இன்னும் அதிமுகவில்தான் இருக்கின்றனர். இதில் தற்போது சி.வி. சண்முகத்துடன் இபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருவதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் தற்போதைய மாவட்டச் செயலாளர் பசுபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள், சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்களை விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.