பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மத்திய பிரதேச மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக தலைநகர் போபாலின் புறநகர்ப் பகுதியான ஜகதீஷ்பூரில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மாநில முதல்வர் மோகன் யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவானது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். இந்த வரைவு மசோதாவை உருவாக்குவதற்கான குழுவின் முன் 80 சதவீத முஸ்லிம் பெண்களும், 40 சதவீத முஸ்லிம் ஆண்களும் அதை ஆதரித்தனர்.புதிய மசோதாவின்படி ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. பொது சிவில் சட்டத்தின்படி திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.மசோதா வரைவுக் குழுவின் முன் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிக் கட்சிகள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்துள்ள நிலையில், ஒவ்வொரு விவகாரத்தையும் ஹிந்து}முஸ்லிம் மற்றும் வாக்கு வங்கி நோக்கில் பார்க்கும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருந்துள்ளது. திருமணம், சேர்ந்து வாழ்வது, தத்தெடுத்தல் ஆகியவற்றின் மூலம் பிறக்கும் குழந்தைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் பொது சிவில் சட்டம் சமமான சட்ட அந்தஸ்தை அளிக்கிறது.திங்கள்கிழமை தொடங்க உள்ள மத்திய பிரதேச சட்டப் பேரவையின் ஐந்து நாள் மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் என்றார் அவர்.முன்னதாக, மத்திய பிரதேச மாநிலத்துக்கான பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை உருவாக்குவதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையில் அரசு அமைத்த குழு தனது அறிக்கையை முதல்வர் வசம் அண்மையில் சமர்ப்பித்தது. பொது சிவில் சட்ட வரம்பில் இருந்து பழங்குடியினருக்கு (ஆதிவாசிகள்) விலக்கு அளித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.வரைவு மசோதா குழுவானது பல்வேறு தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்கள், திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, வாரிசு உரிமை, தத்தெடுத்தல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது உள்ளிட்டவை குறித்து ஆராயுமாறு கோரப்பட்டிருந்தது.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தின் கலாசார, சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இக்குழு பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை உருவாக்கியிருந்தது.பாலின சமத்துவம், பல்வேறு சடங்கு நடைமுறைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தியும், தற்போதுள்ள சம்பிரதாயங்கள் மற்றும் அரசியல் சாசன ஷரத்துகளுக்கு மதிப்பளித்தும் இக்குழு வரைவு மசோதாவை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.