காங்கிரஸ் கட்சியின் அடிமையாக முதல்வர் விஜய் மாறிவிட்டதாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.சென்னையில் செய்தியாளருடன் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, இது குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் விவாதிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. கொள்கைரீதியாக நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம்.நாடாளுமன்றத்தில் ஆண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பாததால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அடியில் தொகுதி மறுவரையறை மசோதாவை மறைத்துக்கொண்டு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகின்றனர்.முதல்வர் விஜய், தனது அரசைக் காப்பாற்றுவதற்காக நாடகத்தில் ஈடுபடுகிறார். அவர் காங்கிரஸின் பேச்சைக் கேட்டால், அவர்களின் அரசு கவிழ்ந்து விடும். காங்கிரஸ் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதும் அவருக்குத் தெரியும். காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதனைத்தான் விஜய் செய்கிறார். அவர் காங்கிரஸின் அடிமையாக மாறிவிட்டார். காலப்போக்கில் அவர் பாஜகவின் அடிமையாகவும் மாறுவார்.ஏனெனில், அவருக்கு சுய சிந்தனை என்பது கிடையாது. கொள்கை ஏதுமில்லை. ஆனால், எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்டார். கொள்கைரீதியாக உறுதியானவர்கள் விஜய்க்கு வாக்களிக்கவில்லை.திரைப்படங்களில் விஜய்யை பார்த்த மற்றும் அனுபவமற்றவர்கள் மட்டுமே அவருக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். அவருக்கு சட்டமோ நடைமுறைகளோ எதுவும் தெரியாது. அனைத்துக் கட்சிகளின் அரசியல் தலைவர்களையும் அவர் மதித்திருக்க வேண்டும்.எம்.பி.க்கள் கூட்டத்துக்கு திமுக எம்.பி.க்களை அனுப்பி வைக்குமாறு கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு எம்.பி.க்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதுகிறார். தலைமைச் செயலாளர் என்பவர் அதிகாரி மட்டுமே, அரசியலில் இருப்பவர் அல்ல. தொகுதி மறுவரையறை தேவையா இல்லையா என்பதை தலைமைச் செயலாளர் தீர்மானிக்க முடியாது. இதில் அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவும் முடியாது. ஆனால், தவெக அரசில் இவைதான் நடக்கின்றன.தவெகவில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அவர்களின் கட்சிக்குள் மௌனமாக்குகின்றனர். அரசு வழக்குரைஞர் பதவிக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையில் லஞ்சம் கேட்கப்பட்டதாக அக்கட்சியின் பெண் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால், அவர் கட்சியிலிருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார். ஊழலைப் பற்றி பேசுபவர்களை இடைநீக்கம் செய்துவிட்டால், ஊழலே இருக்காது என இவற்றையெல்லாம் விஜய் செய்து வருகிறார்.மு.க. ஸ்டாலின் தோல்வி குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கூறியது அநாகரிகமானது. தேர்தலில் பலரும் தோற்றுவிட்டனர், தவெகவினரும்கூட. விஜய்யின் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்க்கு தமிழக மக்கள் முழுமையான பெரும்பான்மை வழங்கவில்லை.அப்பாவை தேடுவதாகச் சட்டப்பேரவையில் விஜய் பேசியது அநாகரிமானது. நீங்கள் இவ்வாறான கருத்தைக் கூறும்போது, உங்களுக்கும் இதுபோன்ற பதிலே கிடைக்கும்" என்று தெரிவித்தார்.தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பாஜகவினர் போராட்டம்! நயினாரும் அன்புமணியும் எங்கே போனீர்கள்? காங்கிரஸ் கேள்விTVK Vijay will become a slave of BJP, says DMK Leader TKS Elangovan