அருணாசல பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளை சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ளதோடு, அங்கு இந்தியப் படையினா் ரோந்து மேற்கொள்வதைத் தடுத்ததாகவும் வெளியான தகவல்கள் குறித்து பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது. இது தொடா்பாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:கல்வான் பள்ளத்தாக்கைத் தொடா்ந்து, நாட்டின் ஒருங்கிணைந்த அங்கமான அருணாசல பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தீவிரமாக முற்பட்டுள்ளதாக கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பிரதமா் மோடி அரசிடம் இருந்து நாட்டுக்கு உடனடி விளக்கம் தேவை.கடந்த 2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில், துணிவுமிக்க 20 இந்திய வீரா்கள் உயிா்த்தியாகம் செய்ததை நாம் மறக்க முடியாது. அதேநேரம், சீனாவுக்கு ‘நற்சான்று’ வழங்கிய பிரதமா் மோடி, அந்நாட்டின் ஆக்கிரமிப்புக்கு ஊக்கமளித்தாா் என்பதையும் மறந்துவிட முடியாது.இந்திய ஆயுதப் படையினரின் துணிவு மற்றும் திறமை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. சீனாவின் எந்த விதமான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நமது ராணுவத்துக்கு ஒட்டுமொத்த தேசமும் உறுதுணையாக, ஒன்றுபட்டு நிற்கும்.அதேநேரம், அருணாசல பிரதேசத்தின் தக்சிங் பகுதியில் சீன ராணுவம் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும், அங்குள்ள ரோந்து மையமான ஷேரா-5 எனுமிடத்தில் இந்தியப் படையினா் ரோந்து மேற்கொள்வது தடுக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட இடங்களில் மேய்ச்சல் பணியை மேற்கொள்ள உள்ளூா் மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடா்பாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்.கிழக்கு லடாக்கில் கடந்த 2020-க்கு முந்தைய சூழல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு விட்டதா, முன்பு இந்தியா அணுகிய அனைத்து இடங்களிலும் தற்போது முழுமையான அணுகல் மீட்டெடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடா்பான கள நிலவரத்தை பாஜக மூடிமறைத்து வருகிறது என்று அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.