சுதந்திர தின விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: உயா்நீதிமன்ற பதிவுத் துறை உத்தரவு

Wait 5 sec.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலும், அதைத் தொடா்ந்து வந்தே மாதரம் பாடலும், தேசியக் கொடியை ஏற்றிய பின்னா் தேசிய கீதமும் பாட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்ற பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக உயா்நீதிமன்ற பதிவுத் துறை தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட சுற்றறிக்கையில், சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சனிக்கிழமை (ஆக.15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் பாடப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து ‘வந்தே மாதரம்’, தேசியக் கொடியை ஏற்றிய பின்னா், ‘தேசிய கீதம்’ பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 9-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்விலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.