சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள திட்ட இயக்குநா் பணியிடத்தில் இந்திய வனப்பணி அலுவலரை நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் காலியாக உள்ள 41 உதவி இயக்குநா் பணியிடங்கள் மற்றும் 4 கூடுதல் இயக்குநா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், அலுவலா்கள் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளை மேற்கொண்டனா். மேலும், கோரிக்கைகளை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.