நமது நிருபர்மணப்பாறையில் உலர் துறைமுகம் அமைக்கவேண்டும் என்று தொழில்துறையினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.உலர்துறைமுகம் அல்லது உள்நாட்டு கொள்கலன் கிடங்கு என்பது, மாநிலங்களின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியாக இருப்பதால், மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் ஆண்டுதோறும் மாநிலங்களில் தேவையின் அடிப்படையில் உலர்துறைமுகத்துக்கான அனுமதியை வழங்கி வருகிறது. இது, கடலோரத் துறைமுகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு கொண்டு வந்து, ஏற்றுமதி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தனியார் பொது கூட்டு பங்களிப்பு முறையில் இவை இயக்கப்படுகின்றன.உலர் துறைமுகம், கடல் துறைமுகத்திலிருந்து தொலைவில் அமைந்திருந்தாலும், சரக்குகளை கையாளுதல், சேமித்தல், வரி மற்றும் சுங்கச் செயல்முறைகளை எளிமைப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளைச் செய்கிறது. சாலை மற்றும் ரயில் மூலம் கடல் துறைமுகங்களுடன் இணைக்கப்படுவதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் நேரமும் செலவும் குறைகிறது. திருச்சியில் ஏன்?: திருச்சியில் வர்த்தக- தொழில் அமைப்புகள் பல ஆண்டுகளாக ஆண்டுகளாக இந்த உலர் துறைமுகத்துக்காக கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இதுவரை அது நிறைவேறவில்லை.தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டமானது பொறியியல் உபகரணங்கள், உதிரி பாகங்கள், உணவுப் பொருள்கள், தினை வகைகள், பிஸ்கட், பழங்கள், காய் கனிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் மற்றும் பொறியியல் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்யும் மையமாக விளங்குகிறது.திருச்சி மட்டுமின்றி கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக் கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்தப் பொருள்கள் வாகனங்கள் மூலம் எடுத்து வரப்பட்டு, விமானம் அல்லது கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், தொழிலதிபர்களும் ஏற்றுமதியாளர்களும் அதிக போக்குவரத்து செலவையும், நேர விரயத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.ஏராளமான பயன்கள்: திருச்சி மாவட்டத்தில் உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், ஏற்றுமதிக்கு தேவையான ஆவணங்களைத் தயாரிப்பது, கொள்கலன் பதப்படுத்துதல், சுங்கச் செயல்முறைகள் ஆகியவற்றை உள்ளூரிலேயே மேற்கொள்ள முடியும். இதன்மூலம் போக்குவரத்து செலவு மற்றும் நேர விரயம் கணிசமாகக் குறையும். அதோடு, தளவாட உள்கட்டமைப்பு மேம்படுவதோடு, புதிய தொழில் முதலிடுகளையும் ஈர்க்கும். இதனால், திருச்சி மற்றும் மத்திய தமிழ்நாட்டில் ஏற்றுமதி அளவு மேலும் உயரும்.பல்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ள உலர் துறைமுகத்தை இங்கு அமைக்க எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணப்பாறையில் போதுமான இடம்: இது தொடர்பாக திருச்சி ஏற்றுமதி- இறுக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என். கனகசபாபதி கூறியதாவது: தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், வளர்ச்சிக்கு உதவவும் உலர் துறைமுகம் அமைப்பதாக கூறியுள்ளது. ஆனால், எங்கு அமைக்கப்படுகிறது என அறிவிக்கவில்லை.தமிழகத்தின் மத்தியப் பகுதியான திருச்சிக்கு உலர்துறைமுகம் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மணப்பாறை சிப்காட் பகுதியில் உள்ள ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில், உலர் துறைமுகத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்திக் கொள்ள முடியும். சிப்காட் நிர்வாகத்தினரும் தொழில் வளர்ச்சிக்கு உதவிட தயாராகவுள்ளனர். மத்திய, மாநில அரசுகள்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். முதல்வரிடம் வலியுறுத்தல்: இதுதொடர்பாக, திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ கூறுகையில், திருச்சி உலர்துறை முகம் குறித்த கோரிக்கை தொடர்பாக 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறேன். மேலும், இந்தத் திட்டத்துக்கு தேவையான நிலம் மணப்பாறை சிப்காட்டில் உள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜய்யிடம் நேரில் தெரிவித்துள்ளேன். திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் திட்டம் குறித்து விளக்கி, நிலத்தை கையகப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு முதல்கட்ட முன்மொழிவை வழங்கியுள்ளேன். திருச்சியில் உலர் துறைமுகம் அமைந்தால் அது, தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில்துறை விரிவாக்கத்தை ஊக்குவிக்கவும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உரு வாக்கவும் பெரும் வாய்ப்பாக அமையும் என்றார் அவர். Dry Port in Manapparai: High Expectations Among the Industrial Community