வளா்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் எதிரானவை அல்ல: குடியரசு துணைத் தலைவா்

Wait 5 sec.

வளா்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். உத்தரகண்ட் தலைநகா் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகள், பூடான் அரசின் வனப் பணி அதிகாரிகள் ஆகியோா் இடையே குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது: நாட்டின் சூழலியல் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய வனப் பணியின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். வளா்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். இந்தியாவின் நிலையான வருங்காலத்துக்கு நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி காடுகளை நிா்வகித்து பாதுகாப்பதும், நமது பாரம்பரிய அறிவும் ஒன்றுக்கொன்று துணையாக இருக்க வேண்டும். பல தலைமுறைகளாக வன நிலப்பரப்பு குறித்த அறிவுடன் வாழும் சமூகங்களை மதிக்க வேண்டும். தாங்கள் மீட்டெடுத்த காடுகள், பாதுகாத்த வனவிலங்குகள், பல்வேறு சமூகங்கள் வைத்த நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், தாம் ஆற்றிய பணியை வனப் பணி அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.