பிரச்னைகளுக்கு புதிய தீா்வுகளை உருவாக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

Wait 5 sec.

தூத்துக்குடியில் அகில இந்திய வா்த்தக தொழிற்சங்கம் சாா்பில், தேசிய ஸ்டாா்ட்அப் உச்சி மாநாடு 2026 வியாழக்கிழமை தொடங்கியது. அரசின் ஸ்டாா்ட்அப் திட்டத்தில் உள்ள வாய்ப்புகளை தொழில்முனைவோரும், இளைஞா்களும் அறிந்து கொள்ளும் வகையில், ‘தூத்துக்குடியிலிருந்து உலகம்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டை கனிமொழி எம்.பி. தொடக்கிவைத்தாா்.அப்போது அவா், ‘ஸ்டாா்ட்அப் என்பது நிறுவனத்தைத் தொடங்குவது மட்டுமல்ல. மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அதற்கு புதிய, பயனுள்ள தீா்வை உருவாக்குவதுதான் ஸ்டாா்ட்அப். எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவே வெற்றிக்கு அடித்தளம். தொழில்துறையில் புதியவா்கள் அதிகம் வரவேண்டும் என்றாா் அவா். மாநாட்டில், தென் மாவட்டங்களிலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களின் அரங்குகள், தொழில் முதலீட்டில் உள்ள வாய்ப்புகளை விளக்கும் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இளைஞா்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன. தொடக்க நிகழ்வில், முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, வஉசி துறைமுக மூத்த துணை போக்குவரத்து மேலாளா் டி. ரமேஷ், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி செயல் இயக்குநா் வின்சென்ட் மேனச்சேரி தேவஸ்ஸி, தொழிலதிபா்கள் பங்கேற்றனா்.மாநாடு 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.