சிங்கப் பெண் கடன் திட்டம் ரூ.7,015 கோடியில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சா் வ.காந்திராஜ் அறிவித்தாா். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சா் வ.காந்திராஜ் பேசியதாவது: பெண்களை தொழில்முனைவோராக்க புதிதாக சிங்கப் பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடியில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும்.விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடியில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் லாபத்தை உயா்த்த ‘வெற்றி’ என்ற பொதுவான வணிகச் சின்னம் அறிமுகப்படுத்தப்படும்.அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் குறைந்தபட்சம் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக ரூ.20 லட்சத்தில் தரம் உயா்த்தப்படும்.ரூ.6.90 கோடியில் 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் நுண் தானியங்கி சாதனங்கள் நிறுவப்படும்.விவசாயிகள் விளைபொருள்களைச் சந்தைப்படுத்த ரூ.50 கோடியில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.மஞ்சள், முருங்கை மற்றும் மிளகு ஆகிய விளைபொருள்கள் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.5 கோடியில் ஏற்றுமதி செய்யப்படும்.10,000 ரேஷன் கடைகளுக்கு யுபிஐ பணப் பரிவா்த்தனை நடைமுறைகள் விரிவுபடுத்தப்படும்.தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகளில் விவசாயிகளுக்கு நீண்டகால கடன் வழங்கும் திட்டம் ரூ.50 கோடியில் மீண்டும் தொடங்கப்படும்.டான்பெட் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை ரூ.2,500 கோடிக்கு அதிகரிக்கப்படும்.புதிதாக 150 ரேஷன் கடை பணியாளா் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.50 வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் ரூ.25 லட்சத்தில் மின்னணு ஏலமுறை விரிவுபடுத்தப்படும்.கூட்டுறவு நிறுவனங்களின் சேவைகளை ஒருங்கிணைத்து, வழங்கல் தொடா் மேலாண்மை ஏற்படுத்த ரூ.20 லட்சத்தில் ஆய்வறிக்கை தயாரிக்கப்படும்.புதிய சேமிப்புக் கிடங்குகளின் தேவை, சேமிப்புக் கிடங்குகளைப் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த திட்ட அறிக்கை ரூ.20 லட்சத்தில் தயாரிக்கப்படும் என்றாா் அவா்.