மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அதிமுக உறுப்பினா் மரகதம் வெற்றிவேலின் பெயரை ‘மரகதம் குமரவேல்’ என பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் மாற்றி அழைத்ததால் அவை கலகலப்பானது. மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வான மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு அண்மையில் தவெகவில் இணைந்தாா். இந்த நிலையில், பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசுவதற்கு பாப்பிரெட்டிபட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவான மரகதம் வெற்றிவேலின் பெயா் பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி, அவரை பேச அழைக்கும்போது தவறுதலாக மரகதம் குமரவேல் என பேரவைத் தலைவா் குறிப்பிட்டாா். இதையடுத்து அதிமுக உறுப்பினா்கள், ‘அவா்தான் (மரகதம் குமரவேல்) இங்கு இல்லையே; யாரை அழைக்கிறீா்கள்?’ என்றனா். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பேரவைத் தலைவா், சிரித்தபடியே மரகதம் வெற்றிவேலை பேசுமாறு அழைத்தாா். இதனால், சில விநாடிகள் பேரவை கலகலப்பானது.