ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை உபாதைக்கு மருந்து...

Wait 5 sec.

கடந்த 28 வருடங்களாக நான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன். ஆரம்பத்தில் மாத்திரைகளில் தொடங்கிய வைத்தியம் தற்சமயம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. நெய், எண்ணெய், கொழுப்புப் பொருள்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர் கூறுகிறார். இதனால் உடல் வறட்சி, தோல் சுருக்கம், நரம்பு பலவீனம் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. இதற்கு ஆயுர்வேதம் மூலம் தீர்வு கிடைக்குமா?-பாண்டியன், திருவாரூர்.ஆரம்ப நிலையில் கப தோஷத்தின் ஆதிக்கத்தால் உண்டாகும் சர்க்கரை நோயானது, கால ஓட்டத்தில் தீர்வு ஏற்படாத நிலையில் கபதோஷம் குறைந்து, வாத- பித்த தோஷங்களின் பிடியில் அகப்பட்டுக் கொள்வதால், அதற்கான தீர்வை நெய்யினால் மட்டுமே ஏற்படுத்தித் தரமுடியும் என்ற ஓர் ஆயுர்வேத பரிந்துரையை உங்கள் முன் கொண்டுவர வேண்டியுள்ளது. இவ்விரு தோஷங்களுக்கு எதிராக நெய்யிலுள்ள நெய்ப்புத்தன்மை போராடி, நீங்கள் குறிப்பிடும் உடல் வறட்சி, தோல் சுருக்கம், நரம்புப் பலவீனம் போன்றவற்றை வென்றுவிடும் சிறப்பைப் பெற்றிருப்பதால், ஆயுர்வேதம் மூலிகை நெய் மருந்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது.ஆயுர்வேதத்தில் சிறந்த நிபுணத்துவம் கொண்டிருந்த சக்ரதத்தர் எனும் முனிவர், தசமூலம் எனும் பத்து மூலிகைகளடங்கிய வேர்கள், புங்கைமரப்பட்டை, தேவதாரு, கடுக்காய் போன்றவற்றுடன் மேலும் பல மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்பட்ட மூலிகை நெய் மருந்தை, சர்க்கரை உபாதையினால் பலகாலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறார். இதுபோன்ற ஒரு சிறந்த மூலிகை நெய் மருந்தை வேறு எந்த மருத்துவ முறையிலும் காணமுடியாது. பசியினுடைய தன்மையை நன்கு கேட்டறிந்த பிறகு, சுமார் 6 கிராம் முதல் 12 கிராம் வரை அளவில் எடுத்து வெதுவெதுப்பான பாலுடனோ வெந்நீரிலோ கலந்து காலை, மாலை என இருவேளை வெறும் வயிற்றில் பருகிவர, தோல் சார்ந்த உபாதைகள், குல்மம் எனும் வயிற்றில் வாயு பந்துபோல் உருண்டு திரண்டு நிற்கும் நிலை, பலவகையான சர்க்கரை உபாதை, உடல் வீக்கம், பூட்டுகளில் வீக்கத்துடன் ஏற்படும் வலி, மண்ணீரல் பாதிக்கப்பட்ட நிலை, மூலம், சீழ்க்கட்டிகள், இராஜபிளவை, காக்காவலிப்பு மற்றும் பித்துபிடித்த நிலை ஆகியவற்றுக்கு நல்லதொரு நெய்மருந்தாகப் பயன்படும். இம்மருந்து தற்சமயம் விற்பனையிலுள்ளது.ஆயுர்வேதத்தில் நெய் மருந்து என்பது வெறும் கொழுப்பு உணவு அல்ல. அது ஒரு மருந்து வாகனம். குறிப்பிட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களை உடலுக்குள் கொண்டு செல்லும் ஊடகமாகவும் பயன்படுத்தப்படுகிறது. வாதம் அதிகரிக்கும் நிலையில் உடலில் வறட்சி, பலவீனம், சோர்வு, உடல் எடைக் குறைதல், திசுக்களின் ஊட்டச்சத்து குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.அத்தகையச் சூழலில், நோயாளியின் ஓட்டுமொத்த நிலையை மதிப்பீடு செய்த பின்னர், இம்மருந்தின் அளவும், காலநிர்ணயமும் மேற்கொள்ளப்படும். ஆனால், இது அனைத்து நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும் சிகிச்சை அல்ல. குறிப்பாக, ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் , உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கல்லீரல் கொழுப்பு அல்லது ரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்கள், செரிமான சக்தி குறைந்தவர்கள், கபம் மற்றும் மேதஸ் அதிகம் உள்ளவர்கள், குடித்த நெய்மருந்து செரிப்பதற்காக வெந்நீர் அருந்த வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.வேங்கைமரப்பட்டை, கருங்காலிக்கட்டை, தர்ப்பைப்புல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அரைலிட்டராக வற்றியதும் எடுத்து, நெய் மருந்து செரிப்பதற்காக, இளஞ் சூடாக சிறிதுசிறிதாகப் பருகினால், சர்க்கரை உபாதையின் தாக்கத்தை நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். இந்த மூலிகைத் தண்ணீரில் நெய் மருந்தைச்சாப்பிடாத சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட்டால், ரத்த சர்க்கரையின் அளவு நல்ல கட்டுக்குள் இருக்கும் என்று ஆயுர்வேத நூல்களில் காணப்படுகிறது.இரவு முழுவதும் திரிபலையின் கஷாயத்தில் ஊறவைத்த பார்லியை, மறுநாள் காலை சிறிது உலர்த்தி, கஞ்சியாக்கி, அதனுடன் இந்த மூலிகை நெய்மருந்தைக் கலந்து சாப்பிட்டு, மேல்குறிப்பிட்ட மூலிகைத் தண்ணீரையும் அருந்தினால், இவை அனைத்தும் சர்க்கரை உபாதையினால் பலகாலம் துன்புறும் நபர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு தக்கதொரு பாதுகாப்பைச்செய்துதரும்.(தொடரும்)