ஆளும் கட்சியினர் சிலர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் அவை சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாகவும் அதை பேரவைத் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இன்று பேரவையில் பேசிய அவர், "பேரவைத் தலைவரான நீங்கள், இந்த அவையை மிகவும் சிறப்பாக வழிநடத்தி கொண்டு செல்கிறீர்கள். எங்களுக்கும் வாய்ப்பு தந்தாலும் எங்களைவிட ஆளும் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆதாரம் இல்லாமல் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீங்களும் அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். எதிர்கட்சிகளைவிட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை அதிகமாக நீங்கள்தான் அவைகுறிப்பில் இருந்து நீக்கி வரலாறு படைத்திருக்கிறீர்கள். அதற்கு என் வாழ்த்துகள். சட்டப்பேரவை நேரலை செய்யப்படுகிறது. நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் தருகிறார்கள். இப்போது பாட்டு எல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. நீங்கள் இதையெல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் மூலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. நீங்கள் அதை நீக்குவதை அர்த்தமில்லாமல் போய்விடுகிறது. முதல்வர் தன்னுடைய மேசையில் 3 கோப்புகள் இருப்பதாக திமுக அரசைக் குற்றம்சாட்டும் வகையில் பேசினார். அதை அவர் பார்க்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னதால்தான் பார்ப்பாரா?" என்று கேட்டார். உடனே ஆதவ் அர்ஜுனா, "மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்வர் அன்று சொல்ல வந்தது. இவர்கள் செய்யாத ரீல்ஸா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள்?2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?" என்று கூறினார். Udhayanidhi stalin speech in tn assembly