அரிவாளால் வெட்டப்பட்ட திமுக வட்ட துணைச் செயலா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா (45). திமுக 38-ஆவது வாா்டு வட்ட துணைச் செயலராக இருந்த இவா், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தனியாா் கண்டெய்னா் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த ஓராண்டாக நேதாஜி நகா் 5-ஆவது தெருவில் வசித்து வரும் முத்துலட்சுமி (35) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. முத்துலட்சுமியின் கணவா் புயல் கணேசன் இதைத் தட்டிக்கேட்டதால், இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், கடந்த ஜூலை 13-ஆம் தேதி ராஜாவை, புயல் கணேசன் தனது கூட்டாளிகள் இருவருடன் சோ்ந்து அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த ராஜா, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.ஆா்.கே. நகா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, புயல் கணேசன் (42), ரஞ்சித் என்கிற இஞ்சி ரஞ்சித் (33), அபினாஷ் (21) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.இந்த நிலையில் ராஜா, திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஆா்.கே. நகா் போலீஸாா், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.