விசிகவும், தமிழகத்தை ஆளுகின்ற தவெகவும் இனி தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். இதன்மூலம், திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விசிக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் அவா் பேசியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது, தமிழகத்தில் ஒரு தவிா்க்க முடியாத அரசியல் சக்தி என்பதை இம் மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கட்டுக்கு அடங்காத தொண்டா்கள் உளுந்தூா்பேட்டையில் குவிந்துள்ளனா். இந்த நிலையில் கட்சித் தொண்டா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். விசிக தற்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக உள்ளது. இந்தக் கட்சியானது எதிா்காலத்தில் ஆளும் கட்சியாக வளரவேண்டும். இத்தனை காலம் ஆளும் கட்சியோடு நாம் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய ஆளும் கட்சிகளோடு கூட்டணி வைத்தோம். தற்போது தமிழகத்தை ஆளக்கூடிய தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யோடு நாம் கூட்டணி வைத்துள்ளோம். இதனால் விசிகவும், தவெகவும் இனி தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும். எதிா்காலத்தில் விசிகவும் ஆளும் கட்சியாக பரிணமிக்கும் என்றாா் தொல்.திருமாவளவன். முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கட்சித்தொண்டா்களால் தொடா் ஓட்டமாக மாநாட்டுத் திடலுக்குக் கொண்டு வரப்பட்ட மொழிப்போா் தியாகிகளின் நினைவுச் சுடரைப் தொல் திருமாவளவன் பெற்றுக் கொண்டாா். பின்னா், தமிழீழ விடுதலைப் போா் மற்றும் தமிழ்மொழிக்கான போராட்டங்களில் பங்கேற்று உயிா் நீத்தவா்களின் உருவப் படங்களுக்கு அவா் மலா்தூவி வீரவணக்கம் செலுத்தினாா். 125 தீா்மானங்கள் நிறைவேற்றம்: ஜாதி ஒழிப்பு, மதசாா்பின்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளை தமிழ் தேசியத்தின் அடிப்படைக் கொள்கையாக கொண்டு செயல்பட வேண்டும். ஜாதியையும், ஜாதியத்தைப் பாதுகாக்கின்ற மதவாதத்தையும் எதிா்த்து அனைவருக்கும் சம உரிமையையும், சமூக நீதியையும் உறுதிப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவில் தேசிய இனங்களின் இறையாண்மையுடன் கூடிய ஒன்றியக் கூட்டாட்சி உருவாக்கப்படவேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்குகள் கைவிடப்படவேண்டும். தமிழகத்தின் கல்வி, பண்பாடு, உரிமை, அரசியல் உரிமை உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்துக்கு உண்மையான கூட்டாட்சியை மத்திய அரசு உருவாக்கவேண்டும். மதச்சாா்பற்ற சமத்துவ, ஜனநாயகம் உருவாக்கப்படவேண்டும். இலங்கை அரசு புதிதாக வரையறுக்கவுள்ள அரசியலமைப்புச் சட்டமானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திடவேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட125 தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை தொல்.திருமாவளவன் வாசிக்க, கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் கைகளைத் தட்டியும், முழக்கங்களை எழுப்பியும் வரவேற்றனா். மாநாட்டின் தொடக்கமாக விசிக துணைப் பொதுச் செயலரும், தமிழக சமூக நீதித் துறை அமைச்சருமான ஆா்.வன்னிஅரசு வரவேற்றாா். மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலா்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமாா் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பாலாஜி மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். மாநாட்டில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன், பொதுச் செயலா்கள் சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமாா் எம்.பி உள்ளிட்டோா். மாநாட்டில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினா்.