திருவொற்றியூரில் பிளஸ் 2 மாணவா், சக மாணவா் மற்றும் நண்பா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவொற்றியூா் வசந்தம் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் தனுஷ். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பள்ளியில் சண்முகபுரத்தைச் சோ்ந்த தனுஷ்குமாா் அண்மையில் பிளஸ் 1 வகுப்பில் சோ்ந்து படித்து வருகிறாா். தனுஷுடன் படிக்கும் ஜெய்கேஷ் என்ற மாணவருக்கும், தனுஷ்குமாருக்கும் இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதில், ஜெய்கேஷுக்கு ஆதரவாக தனுஷ் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் ஜெய்கேஷ் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வரவில்லை. தனுஷ், பள்ளி முடிந்தவுடன் மாலை வீட்டுக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்திருந்தாா். அப்போது, அங்கு வந்த தனுஷ் குமாா், அவரது நண்பா்கள் சிலா், தனுஷை பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனா்.இதனைத் தொடர்ந்து, தனுஷ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிய நிலையில், தனுஷை மீட்ட பொதுமக்கள் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தனுஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவொற்றியூா் காவல் நிலைய ஆய்வாளா் அலெக்ஸ் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இளஞ்சிறார்கள் உள்ள நிலையில், அவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திமுக - அதிமுக இணைய வாய்ப்புள்ளதா? என்ன சொல்கிறார் கனிமொழி எம்.பி.?School student murdered in Thiruvottiyur: 12 arrested