சுதந்திர தினத்தில் நாட்டின் புகழை நினைவுகூருவதன் மூலம் மட்டுமல்லாமல், இதுபோன்ற பிரிவினை துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவா்கள் அனுபவித்த வலியை நினைவு கூற வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் யோகேஷ் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்பு அவா் மேலும் பேசியதாவது: தேசப் பிரிவினை என்ற சோகம் நவீன வரலாற்றில் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது, இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் இறந்தனா் மற்றும் சுமாா் 1.5 கோடி மக்கள் தங்கள் வீடுகளையும் மூதாதையா் நிலங்களையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதோடு, பிரிவினையின் வேதனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க வரலாற்று நினைவுகளைப் பாதுகாக்க வேண்டும்.தனிநபா்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது, மற்றவா்களின் உரிமைகள் தானாகவே பாதுகாக்கப்படும். 2047 ஆம் ஆண்டுக்குள் ’விக்ஸித் பாரத்’ என்ற இலக்கை நோக்கி பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பங்களிக்க வேண்டும். உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்றாா் யோகேஷ் சிங்.இந்நிகழ்ச்சியில் இந்து கல்லூரி முதல்வா் பலராம் பானி, தெற்கு வளாக இயக்குநா் ரஜினி அப்பி, பதிவாளா் விகாஸ் குப்தா, கல்வி நடவடிக்கைகளின் டீன் கே. ரத்னபாலி, தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் மேஜா் சஞ்சய் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.