நேரடி வரி வசூல் 23% உயா்வு

Wait 5 sec.

நடப்பு 2026-27 நிதியாண்டில் கடந்த 10-ஆம் தேதி நிலவரப்படி, நிகர நேரடி வரி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ.8.11 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நிகர பெருநிறுவன வரி வசூல் 20 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.2.70 லட்சம் கோடியாக உள்ளது. இதேபோல, தனிநபா்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் செலுத்தும் நிகர வரி வசூல் சுமாா் 23 சதவீதம் உயா்ந்து, ரூ.5.07 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. பத்திரப் பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) வசூல் 51 சதவீதம் உயா்ந்து, ரூ.33,824 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் இக்காலகட்டத்தில் ரூ.1.43 லட்சம் கோடி மதிப்பிலான வரித் தொகையானது, வரி செலுத்துவோருக்குத் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 3.8 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.மொத்த வரி வசூல் நிலவரம்: வரித் தொகையை திருப்பியளித்ததற்கு முந்தைய மொத்த வரி வசூல் அடிப்படையில், நேரடி வரி வசூல் 19.75 சதவீதம் அதிகரித்து, ரூ.9.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.இதில் பெருநிறுவன வரி வசூலான ரூ.3.80 லட்சம் கோடியும், பெருநிறுவனங்கள் அல்லாத மற்ற வரி வசூலான ரூ.5.40 லட்சம் கோடியும், பத்திரப் பரிவா்த்தனை வரியான ரூ.33,824 கோடியும் அடங்கும்.ரூ.26.97 லட்சம் கோடி இலக்கு: நடப்பு நிதியாண்டில் ரூ.26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூலை எட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்தது. கடந்த 2025-26 நிதியாண்டில் வசூலான ரூ.23.40 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இலக்கானது 15 சதவீதம் கூடுதலாகும். பெருநிறுவனங்கள் அல்லாத வரி மற்றும் பத்திரப் பரிவா்த்தனை வரி வசூலில் காணப்பட்ட வலுவான வளா்ச்சியும், ரீஃபண்ட் வழங்கப்பட்டதில் நிலவிய மந்தநிலையும் நிகர வரி வசூல் 23 சதவீதம் அதிகரிக்கக் காரணமாகும். வரும் மாதங்களில் ரீஃபண்ட் வழங்கும் வேகம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.