விழுப்புரம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு ஆகஸ்ட் 29, செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என். ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பர் 8-ஆம் தேதி ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- நாகப்பட்டினம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), அதே நாளில் பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சென்றடையும்.எதிர்வழித்தடத்தில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 8 ஆகிய தேகிகளில் பிற்பகல் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் நாகப்பட்டினம்-விழுப்புரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06134), அதே நாளில் மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.இந்தசிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீசுவரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.