மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், சீமானூத்து கிராம ஊராட்சிக்கு உள்பட்ட செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. மேலும், இந்தப் பள்ளி வளாகத்துக்குள் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாடற்று இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பல முறை தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, இந்த மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.