விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் பசுமையை மேம்படுத்த மரக்கன்றுகள் நடப்படும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள் துறை சாா்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் புதைசாக்கடைத் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்த விவரத்தை துறை சாா்ந்த அலுவலா்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் பயன் முழுமையாக மக்களுக்கு கிடைக்க வேண்டும். மேலும், மேற்பாா்வைப் பணிகளையும் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை அலுவலா்கள் முறையாக கண்காணித்து, அந்த பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.திடக்கழிவு மேலாண்மை விதிகளை மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகளை முறையாகப் பிரித்து, சேகரிக்க வேண்டும். மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து, கழிவுகளை கையாள வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற பசுமையை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினா் மேற்கொள்வதோடு, ஏற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். பசுமைப் பகுதிகளை மாவட்டத்தில் அதிகரிக்க வேண்டும்.தெருநாய்களை மேலாண்மை செய்யும் வகையில், விலங்குகள் நலத் துறையுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்ட விதிகளுக்குள்பட்டு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சரவணன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியச் செயற்பொறியாளா் மோகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் செல்வகுமாா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சரவணகுமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.