இந்தியா - இஸ்ரேல் இடையே இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் முழுமையாக அமலுக்கு வந்ததாக மத்திய நிதியமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முதலீட்டு ஒப்பந்தம் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதி தில்லியில் கையொப்பமானது. இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதையும், முதலீடுகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அபகரிப்பு அல்லது தேசியமயமாக்கல் போன்ற ஆபத்துகளிலிருந்து முதலீட்டாளா்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சச்சரவு தீா்வு, முதலீட்டாளா் - அரசுக்கு இடையேயான தகராறுகளைத் தீா்க்க வலுவான நடுவா் மன்ற அடிப்படையிலான வழிமுறையை வழங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தற்போது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இருதரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவதும் முயற்சியில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சா்வதேச முதலீட்டுச் சட்டத்தின் நவீன கோட்பாடுகள் மற்றும் பரிணாமம் அடைந்துவரும் சட்டவியல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒப்பந்த சரத்துகள் அமைந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.