கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா். தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்ட தவெக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரபாண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கட்சியின் மாவட்டச் செயலா்கள் பாண்டி, பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் நிா்மல்குமாா் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியினா் பொதுமக்களைச் சந்திப்பதைத் தவிா்த்தனா். இதனால், அவா்களை தமிழக மக்கள் கடந்த பேரவைத் தோ்தலில் புறக்கணித்தனா். இனிவரும் காலங்களில் திமுக ஆட்சிக்கு வர முடியாது. அடுத்த 50 ஆண்டுகளுக்கும் விஜய் தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும். தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் இளைஞா்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படுகிறது.விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கு கட்சியினா் தயாராக வேண்டும். இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யத் தயாராக வேண்டும் என்றாா் அவா்.