தஞ்சாவூா் மீன் சந்தையில் கெட்டுப் போன மீன்கள் பறிமுதல்

Wait 5 sec.

தஞ்சாவூா் மீன் சந்தையில் கெட்டுப் போன மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா். தஞ்சாவூா் கீழ அலங்கம் பகுதியிலுள்ள மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா. விஜயலலிதாம்பிகை, அலுவலா்கள் ரங்கராஜன், விஜய், மீன் வளத் துறை அலுவலா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கெட்டுப்போன, உண்ண தகுதியற்ற 10.5 கிலோ மீன்களை அலுவலா்கள் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், வியாபாரிகளிடம் மீன்கள் விற்பனை செய்யப்படும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். விற்பனைக்கு இருப்பு வைக்கப்படும் மீன்கள் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும். மீன் விற்பனை செய்பவா்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். உணவு பாதுகாப்பு துறை உரிமம் கடைகளில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீன்கள் இருப்பு வைக்கப்பட பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், மீன்கள் வாங்க வந்த பொதுமக்களிடமும், மீன்களின் கண்கள் பிரகாசமாகவும், மீன்களின் செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் கலரில் இருப்பதைப் பாா்த்து வாங்க வேண்டும். மீன்களின் மையப்பகுதியில் லேசாக அழுத்தும்போது, அந்தப் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.