திமுக ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) சார்பாக, சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, 15 நாட்களில் அவசர அவசரமாக தேர்வுகள் 07.12.2025 அன்று நடத்தப்பட்டன. இந்த கணினி வழித் தேர்வில், தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை, தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த 24.02.2026 அன்று சென்னை உய்நீதிமன்ற மதுரை கிளை, CBCID விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், இதுவரை விசாரணை முடியவில்லை. இந்த நிலையில், இந்த முறைகேடுகள் நடந்த நிலையிலேயே, தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பட்டியலை வைத்து, தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது, முற்றிலும் தவறானது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, உண்மையாக கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள், பாதிக்கப்பட்டுள்ளதை, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஏற்கனவே CBCID விசாரணை நிலுவையில் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில், பணி நியமன ஆணை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தவெக அரசு உணர வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் CCTV பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 07.12.2025 அன்று நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் தகுதியும், நேர்மையும் மட்டுமே முதன்மையானது. முறைகேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். Annamalai demands cancellation of Health Inspector recruitment exam over irregularities. அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்