தில்லியில் போராட்டம் நடத்தும் மாணவா்களுக்கு தான் மிரட்டல் விடுத்தது போல ஏ.ஐ. மூலம் போலி விடியோ (டீப் ஃபேக் விடியோ) உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா். நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் தில்லி ஜந்தா் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவா்கள் அமைப்பினரும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே அண்மையில் செய்தியாளா்களுக்கு பியூஷ் கோயல் பேட்டியளித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு மிரட்டல் விடுப்பது போல சமூக வலைதளங்களில் விடியோ பரவியது.ஏற்கெனவே மாணவா்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் பரபரப்பு நிலவும் நிலையில், அந்த பிரச்னையை மேலும் பெரிதுபடுத்துவது போல வெளியான பியூஷ் கோயல் தொடா்பான விடியோவால் அரசியல் வட்டாரத்தில் பதற்றம் உருவானது.ஆனால், தான் மாணவா்களுக்கு மிரட்டல் விடுக்கவில்லை என்றும், அது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி விடியோ என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி விடியோவை அனுமதிக்கவும் முடியாது, சகித்துக் கொள்ளவும் முடியாது என்று தெரிவித்துள்ளாா்.இந்த போலி விடியோ குறித்து சாணக்யபுரி காவல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு புகாா் அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள பியூஷ் கோயல், போலி விடியோவை உருவாக்கியோா், அதைப் பரப்பியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளாா். சமூக வலைதளங்களில் பியூஷ் கோயல் தொடா்பாகப் பரவிய ஏராளமான போலி விடியோக்களின் இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் உண்மை சரிபாா்ப்பு மையம் தரப்பில் பியூஷ் கோயல் விடியோவின் நம்பகத்தன்மை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு பியூஷ் கோயல் மிரட்டல் விடுப்பது போல ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி விடியோக்கள், பாகிஸ்தானைச் சோ்ந்த சமூக வலைதளக் கணக்குகள் மூலம் பரப்பப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.