ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஜனவரியில் உச்சத்தை அடைந்த நிலையில், போரட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் இன்று அறிவித்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனை பொதுவெளியில் உள்ள சதுக்கத்தில் நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அபோல்ஃபாஸ்ல் செபாஹி மற்றும் அமீர்-ஹொசைன் சபாஹி என்கிற இருவர் கடந்த ஜனவரி 8 அன்று காவல்துறை அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கி, அவர்களைச் சாலை பெயர்ப்பலகைகளில் கட்டி, தரையில் தள்ளி அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை செய்துள்ளனர். கடவுளுக்கு எதிரான நடவடிக்கையான பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி அச்சத்தை உண்டாக்க்கியது, நாட்டின் பொது ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இருவர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்தது. இந்த நிலையில், இன்று காலை மத்திய இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள மாலெக்ஷாஹர் நகரின் சதுக்கத்தில், பொதுமக்கள் முன்னிலையில் இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானில் கடந்தாண்டு டிசம்பரில், நாடு முழுவதும் அரசை எதிர்த்து தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 8,9 அவை உச்சமடைந்தன. இதில், 3,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வன்முறையை அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து திட்டமிட்டு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானில் இராணுவ ரீதியாகத் தலையிடுவேன் என அப்போது அச்சுறுத்தல் விடுத்தார். பின்னர், பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கின. அப்போது முதல், மோதல் மற்றும் போராட்டங்கள் காரணமாக ஈரான் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு, மரணதண்டனைகள் அதிகரித்துள்ளன. சில நாள்களுக்கு முன்பு இஸ்பஹான் மாகாணத்தில் இதேபோன்ற குற்றச்சாட்டுல் இருவர் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு அடுத்தபடியாக, அதிகளவு மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். Two individuals who protested against the government in Iran have been publicly executed by hanging.அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு