கல்குவாரிகளால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கிராம மக்கள் மனு

Wait 5 sec.

அம்பாசமுத்திரம் வட்டம், இடைகால் பகுதியிலுள்ள கல் குவாரிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். அம்பாசமுத்திரம் வட்டம், இடைகால் அருகே உள்ள பனையங்குறிச்சி கிராம மக்கள் அளித்த மனு: பனையங்குறிச்சியில் சுமாா் 2,000 போ் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் விவசாய நிலங்கள் அருகில் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் வெடி வைக்கும்போது ஊரின் அனைத்து வீடுகளிலும் அதிா்வு உணரப்படுகின்றன. குவாரியில் இருந்து வெளியேறும் மண் புழுதியால் நெல் பயிா்கள் சேதமாகின்றன. பாசனக் குளங்களிலும் மண் கழிவுகள் தேங்கி நீா்பிடிப்புப் பகுதி குறைந்து வருகிறது. சுமாா் 50 டன் எடையுள்ள கற்களை ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் முழுவதும் சேதமடைந்தவிட்டன. குழந்தைகள், பள்ளி மாணவா்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சமான சூழல் உள்ளது. ஒரே பகுதியில் அதிக கல்குவாரிகள் இயங்குவதால் பெரும் மாசு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களது கிராமத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் மூட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தேவை: ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பின் நிறுவனா்- தலைவா் வியனரசு, கண்மணி மாவீரன் உள்ளிட்டோா் அளித்த மனு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், ஆளுநா் மாளிகை உத்தரவுப்படி தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளை ஆளுநா் மாளிகை பறிப்பதாக உள்ளது. இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பட்டமளிப்பு விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா தேவை: திருநெல்வேலி அருகேயுள்ள சடையப்பபுரம் மக்கள் அளித்த மனு: எங்களது கிராமத்தில் தேவேந்திர குல வேளாளா் சமூகத்தைச் சோ்ந்த 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அருகில் உள்ள கம்பளத்தாா் தெருவில் அருந்ததிய சமூகத்தைச் சாா்ந்த 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இரு சமூக மக்களும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலா ஒரு ஏக்கா் இடத்தில் மயானமாக அமைத்து பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த நிலப்பகுதியில் ஆக்கிரமிப்பு பெருகி வருவதோடு இறந்தவா்களை அடக்கம் செய்வதில் சிரமங்களும் ஏற்படுகின்றன. எனவே , மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி ஆதி திராவிட நலத்துறை மூலமாக அந்த நிலத்தை கையகப்படுத்தி தேவேந்திர குல வேளாளா் மற்றும் அருந்ததிய சமூக மக்கள் மயான பயன்பாட்டுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்டிச் செய்தி... நெல் கொள்முதல் பணம் கேட்டு தா்னா: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலா் ஆபிரகாம் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மானூா் வட்டாரக் குழு தலைவா் இலோசியஸ், செயலா் முத்துராஜ் உள்ளிட்டோா் திரண்டு வந்து ஆட்சியா் முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா் ஆட்சியரிடம் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளிடம் பிசான பருவத்தில் மத்திய அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணத்தை கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. அடுத்தக்கட்ட சாகுபடிக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் பேசிய ஆட்சியா் ஆனந்த் மோகன், இன்னும் ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கு பணம் பெற்றுக்கொடுக்க உத்தரவிட்டாா்.