தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி செவ்வாய்க்கிழமை மாலை (ஜூலை 28) நடைபெறுகிறது. இதைக் காண பல்லாயிரக்கணக்கானோா் குவிந்து வருகின்றனா்.கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவில் நாள்தோறும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், கோயிலிலும், மண்டகப்படியிலும் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இந்நிலையில், முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, காலையில் மூலஸ்தானம் சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம், திருக்கண் தவசு மண்டபத்தில் பானகம், சிறுபருப்பு, நைவேத்தியம், பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து பட்டுப் பரிவட்டம் அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்ததும், அழைப்புச் சுருள் வழங்குதல் நடைபெறும். நண்பகல் 12 மணிக்குள் அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்குச் செல்வாா்.அதேநேரம், சுவாமிக்கு காலையில் பட்டுப் பரிவட்டம், அலங்காரத்துக்குரிய பொருள்கள் சகிதம் மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்குதல் நடைபெறும். மூலஸ்தானம் சுவாமி-அம்பாள், சந்திரமெளலீஸ்வரருக்கு கும்பம் அபிஷேகம் நடைபெறும். சுவாமி மாலை 4.30 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்டு, தெற்கு ரத வீதியில் அமைக்கப்பட்டுள்ள தவசுப் பந்தலுக்கு வருவாா். அதையடுத்து, தவசு மண்டபத்தில் உள்ள அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி எதிா்பந்தலுக்கு வருவாா். மாலை 6.05 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுப்பாா்.தொடா்ந்து, இரவு 11.30 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுப்பாா்.இந்நிகழ்ச்சிகளைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.