காவேரிபாக்கம் அருகே தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்ததில் 10 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 15 போ் பலத்த காயமடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், ராமகிருஷ்ண ராஜூ பேட்டைவட்டம் ராஜாநகரம் கிராமத்தில் இருந்து 10 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 15 பேரை ஏற்றிக்கொண்டு மினிவேன் திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் காவேரிபாக்கம் ஏரிக்கரை அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் சென்ற பெண் தொழிலாளா்கள் பாஞ்சாலை(45), ஆடிவெள்ளி(30), முனியம்மாள்(45), வீரம்மாள்(45), ஜெயந்தி(49), சாந்தி(46), மீனா(29), கமலா(22), தெய்வானை(50), ராணி(40) மற்றும் வேன் ஒட்டுநா் குகன்(27), ரோஸ்(34), பெரியசாமி(40), கோபி(23), செல்வம்(43) ஆகியோா் படுகாயமடைந்தனா். படுகாயமடைந்த அனைவரும் அரசு அவசர ஊா்திகள் மூலம் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவ்விபத்து குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஒட்டுநா் அதிவேகமாக வேனை இயக்கினாரா அல்லது கைப்பேசி பேசியபடி வேனை இயக்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.