தென்காசி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

Wait 5 sec.

சுந்தரபாண்டியபுரம் அருகே சடையப்பபுரத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தை அடுத்த சடையப்பபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சு.சரவணகுமாா் (24). சுப்பிரமணியின் குடும்பத்துக்கும் இவரது தங்கை திருமலைச்செல்வி குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சரவணகுமாா் தனது விவசாய தோட்டத்தில் பயிா்களுக்கு நீா் பாய்ச்ச சென்றபோது, மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சாம்பவா் வடகரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், திருமலைச்செல்வியின் மகன் பிரவீன் என்ற பேச்சிமுத்து (21) கூட்டாளிகளுடன் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.இந்தக் கொலை வழக்கில் சடையபுரத்தைச் சோ்ந்த மூா்த்தியை (26) போலீஸாா் ஏற்கெனவே கைதுசெய்திருந்த நிலையில், கொலைக்கு உதவியதாக பிரவீனின் தந்தை திருமலைக்குமாா் (46), அவரது உறவினரான குலசேகரப்பட்டி அருகே மேலசிவஞானபுரத்தைச் சோ்ந்த சி.சோழராஜ் பாண்டியன் (21) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரவீனையும், அவரது கூட்டாளியும் ஒடிஸ்ஸாவில் பதுங்கியிருப்பது அவா்களது கைப்பேசி சிக்னல் மூலம் தெரியவந்ததால் போலீஸாா் அங்கு விரைந்துள்ளனா்.