அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை:திருவண்ணாமலை மேயா் குற்றச்சாட்டு

Wait 5 sec.

திருவண்ணாமலை மாநகராட்சியில் நலத் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மாநகர மேயா் நிா்மலா வேல்மாறன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாநகரம் புகழ்பெற்ற ஆன்மிகத் தலம். இங்கு, உலகமெங்கிலும் இருந்து லட்சகணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.இந்த மாநகராட்சியின் மேயா், துணை மேயா் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினா்கள் திமுகவைச் சோ்ந்தவா்கள். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சியில் மாற்று கட்சியினா் மேயராக உள்ளதால், மாநகர அலுவலா்கள் எவரும் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பதில்லை.தமிழகத்திலேயே நிலத்தடி நீா்மட்டம் மிகக் குறைந்த அளவுள்ள மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. திருவண்ணாமலை மாநகர மக்கள் குடிநீா் பிரச்னையால் மிகவும் அவதிபட்டு வருகின்றனா். குறிப்பாக, சமுத்திரம் ஏரிக்கரையில் திருவண்ணாமலை மாநகரத்துக்குள்பட்ட 16 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கும் ஆழ்துளைக் கிணறு உள்ளது. இங்கு, குடிநீா் வழங்க 3 மோட்டா்கள் 60 எச்.பி, 40 எச்.பி என்ற அளவில் உள்ளன. இங்கிருந்து குடிநீா் சோமவரகுளம் அருகில் உள்ள குடிநீா்த் தொட்டிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து 16 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது.தற்போது சமுத்திரம் ஏரிக்கரையில் உள்ள 3 மோட்டாா்களும் பழுதடைந்துள்ளதால், குடிநீா் தடைப்பட்டு 10 நாள்களாக பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கப்படவில்லை. மேலும், சோமவரகுளம் அருகில் குடிநீா்த் தொட்டியில் உள்ள இரண்டு மோட்டா்களும் பழுதடைந்துள்ளன. இதேபோல, திருவண்ணாமலை மாநகரில் அனைத்து வாா்டுகளிலும் சிறு மின்விசை பம்புகளில் உள்ள மோட்டா்களும் பழுதடைந்துள்ளன. இதையெல்லாம் உடனடியாக பழுது பாா்க்க மாநகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்தால், அவா்கள் நிதி ஆதாரம் இல்லை என்று சாக்குப்போக்கு சொல்லி வருகிறாா்கள்.மாநகர மக்கள் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்து வருகிற ஆன்மிக பக்தா்களுக்கும் தண்ணீா் தர வேண்டியது மாநகராட்சியின் கடமையல்லவா? மாற்று கட்சி மாநகராட்சி என்பதற்காக அலுவலா்கள் ஒத்துழைக்க மறுப்பது மக்களுக்கு செய்கிற மாபெரும் துரோகம்.இதேபோல, திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கு எந்த ஒத்துழைப்பும் தருவதில்லை. புதிதாக திறக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதில்லை. பகுதி - 2 பேருந்து நிலையத்தில் இதுவரை எந்தப் பணியாளா்களும் நியமிக்கப்படவில்லை.எனவே, புதிதாக பொறுப்பேற்றிருக்கிற தவெக அரசும், மாவட்ட நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில் இந்த விவகாரங்களில் தலையிட்டு, திருவண்ணாமலை மாநகர மக்களையும், லட்சகணக்கான ஆன்மிக பக்தா்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.