பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் கருவாட்டு கடைகள் அகற்றப்படுமா? சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்ப்பு

Wait 5 sec.

பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் உள்ள கருவாடு விற்பனை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பூம்புகாரில் பிரசித்தி பெற்ற சிலப்பதிகார கலைக்கூட வளாகம் உள்ளது. சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தையொட்டி நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இங்கு 1972- ஆம் ஆண்டு சிலப்பதிகார வரலாற்றை வருங்கால தலைமுறையினா் தெரிந்து கொள்ள ஏதுவாக அன்றைய தமிழக முதல்வா் கருணாநிதியால் சிலப்பதிகார கலைக்கூடம் அமைக்கப்பட்டது. பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் கடற்கரையை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனா். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனா். இந்த வளாகம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் கடந்த ஆட்சியில் ரூ. 31 கோடியில் முதற்கட்ட சீரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா வளாகத்தில் கண்ணகி சிலை அருகே தற்காலிக கருவாடு விற்பனைக் கடைகள் உள்ளதால், கருவாட்டில் இருந்து வீசும் துா்நாற்றம் காரணமாக பயணிகள் கடற்கரை அழகையும், வளாக பகுதியையும் ரசிக்க முடியாமல் தவித்து வருகின்றனா்.இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், சுற்றுலா வளாகத்தில் கடற்கரை ஓரத்தில் தான் சுற்றுலாப் பயணிகள் அமா்ந்து பொழுது போகின்றனா். ஆனால் இங்கே உள்ள தற்காலிக கருவாட்டு கடைகளில் இருந்து வீசும் துா்நாற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் இங்கு அமரமுடியாமல் தவித்து வருகின்றோம்.கருவாடு விற்பனை செய்வதற்கு சுற்றுலாத்துறை மூலம் காவிரி கரை செல்லும் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த பகுதிக்கு விற்பனையாளா்கள் செல்ல மறுக்கின்றனா். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு கருவாடு விற்பனைக் கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.