தொல்லியல் விழிப்புணர்வு- தலையாய கடமை!

Wait 5 sec.

முனைவர் இனியன் இளவழகன்ஒரு நாட்டின் முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் இருப்பதைப் போலவே, அந்த தேசத்தின் தொன்மையான வரலாறு மற்றும் கலாசாரச் சின்னங்களைப் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதும் இளைஞர்களின் தலையாய கடமையாகும். இந்த உயர்வான பொறுப்பை மாணவப் பருவத்திலேயே ஏற்படுத்துவதற்கு தொல்லியல் சார்ந்த கல்வியும், விழிப்புணர்வும் மிக அவசியமானவையாக இருக்கின்றன.தொல்லியல் என்பது அகழாய்வு மேற்கொள்வதற்கான ஒரு துறையாக மட்டும் கருதப்படக் கூடாது. மனிதகுலத்தின் தோற்றம், சமூக வளர்ச்சி, கலை மற்றும் கட்டடக் கலை, சமய நம்பிக்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றம், அன்றாட வாழ்வியல் போன்ற பல்வேறு கூறுகளை அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து மறுகட்டமைக்கும் விரிவான அறிவியல் மற்றும் கலைத் துறையாக அது விளங்குகிறது.ஆகவே, மாணவர்களிடையே தொல்லியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அவர்களிடம் வரலாற்றின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதுடன் மட்டுமல்லாமல், ஆதாரபூர்வமாக சிந்திக்கும் திறன், ஆராய்ச்சி மனப்பான்மை, பண்பாட்டு மரபுகளை மதித்து பாதுகாக்கும் பொறுப்புணர்வு மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட முழுமையான ஆளுமைகளாக உருவாகவும் வழிவகுக்கிறது.சமகாலத்தில் இளைஞர்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வரலாற்றுத் தகவல்களை எளிதில் பெறுகின்றனர். இருப்பினும், இத்தகைய தகவல்கள் அனைத்தும் எப்போதும் அறிவியல் பூர்வமான உண்மைகளை மட்டும் கொண்டிருப்பதில்லை. இதனால், ஆதாரமற்ற கட்டுக்கதைகளும், தவறான வரலாற்றுப் பதிவுகளும் சமூகத்தில் பரவுவதற்கான அபாயம் உள்ளது.மாணவர்களிடையே தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளைப் பெறுகின்றனர்; அறிவியல் பார்வை (தரவுகள் மற்றும் சான்றுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுகிறது), பகுத்தறியும் திறன் (உண்மையான வரலாற்றுக்கும், புனையப்பட்ட தகவல்களுக்கும் இடையிலான நுட்பமான வேறுபாடுகளைக் கண்டறியும் திறன் வளர்கிறது), பாதுகாப்பு உணர்வு (நம் முன்னோர் விட்டுச்சென்ற கலைப் படைப்புகளின்அடையாளங்களையும், பாரம்பரியச் சின்னங்களையும் காக்க வேண்டிய கடமை உணர்வு உருவாகிறது), தன்னம்பிக்கை (உள்ளூர் வரலாற்றின் வேர்களை அறிவது, மாணவர்களிடம் தங்களின் பூர்வீகம் குறித்த பெருமிதத்தை வளர்க்கிறது), உலகளாவிய பார்வை (தேசிய அளவிலான வரலாறு மட்டுமின்றி, உலகளாவிய மனிதப் பண்பாட்டின் மதிப்பையும் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியை அளிக்கிறது).மாணவர்களிடம் தொல்லியல் விழிப்புணர்வை உருவாக்கும் வழிமுறைகள் நாம் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் தொல்லியலை ஒருங்கிணைப்பதன் மூலம் அதன் அடிப்படை கருத்துகளை அறிமுகப்படுத்தலாம். வகுப்பறையில் கற்பிப்பதை விட நேரடியாக வரலாற்றுத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும் களப்பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த உதவும். அருங்காட்சியகக் கல்வி, மாதிரி அகழாய்வு போன்ற செயல்வழிக் கற்றல், உள்ளூர் வரலாற்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்றவையும் தொல்லியல் தொடர்பான ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும். மேலும், ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் தொல்லியல் மன்றங்கள் அமைத்தல், ஆய்வாளர்களுடன் நேரடி சந்திப்பு, சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்துதல், பாரம்பரிய பாதுகாப்பு இயக்கங்களில் மாணவர்களை ஈடுபடுத்துதல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தல் ஆகிய செயல்பாடுகள் அவர்களைத் தொல்லியலில் ஈடுபாடு கொண்டவர்களாக மாற்றும்.தமிழக பள்ளிகளில் தொல்லியல் மன்றங்கள் செயல்பட்டு வந்தாலும், அவை முழு வீச்சில் செயல்பட செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொல்லியல் விழிப்புணர்வை உருவாக்குவதில் பாடத்திட்டத்தில் குறைந்த முக்கியத்துவம், களப்பயணங்களுக்கு நிதிப் பற்றாக்குறை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவு, மாணவர்களின் குறைந்த அறிமுகம் மற்றும் சமூகத்தில் நிலவும் தவறான வரலாற்றுப் புரிதல்கள் போன்ற சில சவால்களும் உள்ளன. இவற்றை அரசு, கல்வி நிறுவனங்கள், தொல்லியல் துறைகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து மாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மாணவர்களிடம் தொல்லியல் விழிப்புணர்வை உருவாக்குவது என்பது கடந்தகாலத்தைப் பற்றிய அறிவை வழங்கும் கல்விச் செயல்பாடு மட்டுமல்ல; அது அறிவியல் சிந்தனை, விமர்சனப் பார்வை, பண்பாட்டு மரியாதை, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வை உருவாக்கும் நீண்டகால செயல்திட்டமாகும்.ஒரு தொல்பொருள் அழிக்கப்படும்போது அது ஒரு கல் அல்லது மண்பாண்டத்தின் இழப்பு மட்டுமல்ல; மனித வரலாற்றின் ஒரு பக்கம் நிரந்தரமாக அழிக்கப்படுகிறது. அந்த உண்மையை மாணவர்கள் உணரும்போது மட்டுமே எதிர்காலத் தலைமுறை பாரம்பரியத்தின் உண்மையான பாதுகாவலர்களாக உருவாக முடியும்.எனவே, தொல்லியல் விழிப்புணர்வை கல்வியின் அனைத்து நிலைகளிலும் அறிவியல், அனுபவம் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.