மக்களவையில் திமுக எம்.பி.க்கள் தர்னா

Wait 5 sec.

நமது நிருபர்மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீட்டை வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், மக்களவை அலுவல்கள் தொடங்கும் முன்பாக பிரதான வாயில் பகுதி படிக்கட்டுகளில் நின்றபடி, "கட்டாதே கட்டாதே மேக்கேதாட்டில் அணை கட்டாதே; கொடுக்காதே, கொடுக்காதே, மேக்கேதாட்டில் அணை கட்ட அனுமதி கொடுக்காதே' என்று கர்நாடக அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த தர்னாவுக்குப் பிறகு மக்களவைக்குள் சென்ற எம்.பி.க்கள், அவை தொடங்கியும் இதே விவகாரத்தை எழுப்பி குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே திமுக எம்.பி.க்கள் சிலர் மக்களவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், சிஜேபி போராட்ட விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் திங்கள்கிழமை அவை அலுவல்கள் தொடங்கியது முதல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், திமுக உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து மக்களவைத் தலைவர் தனது கருத்தை தெரிவிக்கவில்லை. முன்னதாக, விவசாயிகள் தொடர்புடைய பிரச்னையை எழுப்பும் விதமாக மக்களவைக்கு வந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் கழுத்தில் பச்சை துண்டை அணிந்தவாறு தர்னாவிலும் மக்களவை அமர்விலும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி பச்சை நிற புடவை அணிந்திருந்தார்.