தில்லியில், போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில், சிஜேபி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று துவங்கிய ஆர்வலர் அபிஜீத் தீப்கே, கடந்த சில நாள்களாக உடல்நல பாதிப்பால் போராட்டங்களுக்கு இடையே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தனக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காகச் சிகிச்சை பெற்று வருவதாகவும், அபிஜீத் தீப்கே சனிக்கிழமை (ஜூலை 25) காலை வெளியிட்ட விடியோவில் தெரிவித்துள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தரிலேயே முகாமிட்டு போராட்டம் நடத்தி வருவதால் அவருக்கு இந்தக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள விடியோவில், “உங்களுக்குத் தெரியும் கடந்த சில நாள்களாக நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தேன். மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்து விட்டன. எனக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். இருப்பினும், தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில் தனது போராட்டம் நிறைவடையாது எனவும், நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சிகளுக்கு (இளைஞர்கள்) நன்றி எனவும் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். முன்னதாக, இளைஞர்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கரப்பான்பூச்சிகள் எனக் கூறியதை விமர்சிக்கும் வகையில் அபிஜீத் தீப்கே தொடங்கிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி எனும் சமூக ஊடகப் பக்கம் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று நாட்டின் பெரும் இயக்கமாக உருவாகியுள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலகுங்கள்: நடிகை ஜோதிகாAbhijit Deepke, founder of the CJP who is currently staging a protest in Delhi has contracted typhoid fever.