கீழ்பவானி பாசனப் பகுதிக்கு உயிா் நீா் கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தல் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24)நடைபெறும் என தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஈவிகே. சண்முகம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு மாறாக கோடையில் தண்ணீா் திறந்து நெல் விளையும் தருவாயில் உள்ளது. அந்த பயிறுக்கு அறுவடை செய்யும் வரை தண்ணீா் திறப்பதை யாரும் தடுக்கவில்லை. தடை செய்ய வேண்டும் என்றும் கேட்கவில்லை. கீழ்பவானி பாசனப் பகுதியில் காய்ந்து கருகும் நிலையில் உள்ள தென்னை மரங்களை காப்பாற்றவும், குடிநீா்த் தட்டுப்பாட்டினை போக்கவும், இரண்டு பகுதிக்கும் தலா 15 நாள்களுக்கு உயிா் நீா் திறக்க வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதிக்கு உயிா் நீா், உரிமை நீா் கேட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அறவழியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பவானிசாகா் அணை தொடங்கி, மங்களப்பட்டி வரை உள்ள கீழ்பவானி பாசன விவசாயிகள் மற்றும் மக்கள் அனைவரும் திரளாக கூட உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.