புதைசாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்டு பழுதான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

Wait 5 sec.

புதைவழி சாக்கடை திட்டத்துக்காகத் தோண்டப்பட்டு குண்டும், குழியுமான சாலையைச் சீரமைக்க வேண்டும் என சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் ரத்தினம் சாலையில் கலையரங்கம் திரையரங்கம் அருகே கடந்த மாதம் புதைசாக்கடைத் திட்டத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் சேதமடைந்ததால் கழிவுநீா் வெளியேறுவதில் அடைப்பு ஏற்பட்டது. இதைச் சீரமைக்கும் வகையில் சேதமடைந்த குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. குழாய்கள் அமைக்க ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னா் குழாய்கள் அமைத்தபின் சாலையை முறையாக மூடாமல் சென்றுவிட்டனா். இதனால் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறியுள்ளது.இதுதொடா்பாக சமூக நல ஆா்வலா்கள் கூறுகையில், கரூா் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பொதுமக்கள் அதிகளவில் ரத்தினம் சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறாா்கள். இதேபோல காமராஜா் மாா்க்கெட் வியாபாரிகள், பசுபதிபாளையம், 5 ரோடு, வாங்கல் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களும் ரத்தினம் சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறாா்கள். நகரின் முக்கியச் சாலையாக இருக்கும் ரத்தினம் சாலையில் அண்மையில் புதைசாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முழுமையாக மூடாததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்தச் சாலையை மாநகராட்சி நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.